Skip to main content

இயேசுவின் சீஷரில் இயேசுவின் சாயல் | BIBLE STUDY


by பிறேமன் அண்ணா

>>>


என் அன்பின் தம்பி தங்கைமாரே,

இயேசு  சுவாமியின் நல்ல சீஷர்களாய் வாழ அழைக்கப்பட்டிருக்கிற நம் ஒவ்வொருவரிலும் இயேசு சுவாமியின் சாயல் இருக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம். இயேசுவின் சீஷர் என எம்மை அர்ப்பணிக்கும்போது , நம்மில் உண்மையாகவே இயேசு சுவாமியைப் போன்ற குணநலன்களும் வாழ்க்கைமுறையும் இருக்கின்றதா என்பதை நாம் சிந்தித்துக்கொள்ளவேண்டும். இயேசு சுவாமியின் சாயல் எம்மில் உள்ளதா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ளலாம்? சிந்திப்போமா? 

நம் ஆண்டவராகிய தேவன் நம்மை சிருஷ்டித்து உருவாக்கியபோது, நம்மைத் தமது சாயலாக உருவாக்கினார். ஆதியாகமம் 1: 26 ல், "பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" என்று சொல்லியிருப்பதை நாம் வாசிக்கிறோம். அப்படியானால், நம்மை மனுஷராய் படைத்தபோதே தமது சாயலையும் தமது ரூபத்தையும் நம்மில் ஆண்டவர் வைத்திருக்கிறார். தமது குணாதிசயங்கள், தமது எண்ணங்கள் தமது உணர்வுகள், தமது விருப்பங்கள் என அவருடைய சாயலை நம்மிலே பதிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது, நம்மைப் படைத்தபோது தமது ரூபத்தின்படியேயும் நமது உடலை ஆண்டவர் உருவாக்கினார் என வேதம் சொல்லுகிறது. ஆகையால், இன்றைக்கு உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடியிலோ அல்லது உங்கள் Phone இலுள்ள Selfie கேமராவிலோ உங்களை நீங்கள் பார்க்கும்போது, "நான் தேவனுடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியேயும் படைக்கப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லவேண்டும். 

ஆகையால், தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் பெற்று, நமது இயேசுசுவாமியின் சீஷராய் வாழ விரும்புகிற நாம் ஒவ்வொருவரும் இந்த மகிமையான தன்மையை எம்மில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இயேசு சுவாமி எப்படியாக பாவத்துக்கு தன்னுடைய வாழ்வில் இடம்கொடாமல், பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டினாரோ, அதேபோலவே நாங்களும் வாழ எத்தனிக்கவேண்டும். எம்முடைய வாழ்வும் இயேசுவைப்போல பரிசுத்தமாய் இருக்கவேண்டும். இயேசு சுவாமி எப்படியாக எல்லோரிடத்திலும் தமது அன்பையும் ஆதரவையும் மனதார கொடுத்துவந்தாரோ, அது போலவே எமது வாழ்வும் இருக்கவேண்டும். பிறர்மீது அன்பு வைத்து அவர்களை ஆதரித்து, ஏன் சில நேரங்களில், நம்மை இழந்தும் மற்றவர்களுக்காக நாம் வாழவேண்டும். அதுவே உண்மையான இயேசுவின் சீஷரில் நாம் காணும் இயேசுவின் சாயல். இப்படியாக வாழ்வதே நமது அழைப்பு.

ஆகையால், இன்றைக்கு எங்களையே நாங்கள் சிந்தித்துப் பார்ப்போம். இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்புகிற எம்மில் இயேசுசுவாமியின் எண்ணங்கள், விருப்பங்கள், குணாதிசயங்கள், உணர்வுகள் இருக்கின்றனவா என சிந்தித்துப் பார்ப்போம். வரும் நாட்களில் இந்த குணாதிசயங்களைப் பற்றி மென்மேலும் உங்களோடு பேச காத்திருக்கிறேன். 

ஆண்டவர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் தமது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலைத் தந்து தமது உண்மையான சீஷராய் வாழ உதவி செய்வாராக.



"இன்னும் இன்னும் உம் அன்பை அறியணுமே..."





Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...