Skip to main content

உகண்டாவுக்கு சென்ற மிஷனரி – ஜேம்ஸ் ஹன்னிங்டன் (1847-1885)

 


by டேவிட் அண்ணா

>>>

‘அசுத்தமான குடிசை. விஷப்பூச்சிகளும் எலிகளும் நிறைந்த குடிசை. அந்த குடிசையில் அடைத்து வைத்தால் போதும் யாராயிருந்தாலும் ஒரு வாரத்திற்குள்ளாகவே மரணித்து விடுவர். அப்படிப்பட்ட மோசமான இடத்தில்தான் சிறைவைக்கப்படுகிறார். ஆனால் மற்றவர்களைப் போல இவர் மரணித்தும் போகவில்லை. மனந்தளர்ந்தும் போகவில்லை. இதைப்பொறுத்துக் கொள்ளாத சிற்றரசன் அவரைக் கொலை செய்யும்படி உத்தரவிடுகிறான்.’ யார் இவர்? உண்மையாகவே கொலை செய்யப்பட்டாரா?

செப்டெம்பர் 3, 1847ம் ஆண்டு இங்கிலாந்தில் சசெக்ஸ் எனும் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். சில காலங்களில் இறையியலை படிப்பதில் நாட்டங்கொண்டவராய் தன் வேலையைத் துறந்து இறையியல் கல்லூரி  படிப்பை முடித்தார். இவருடைய பெயர் ஜேம்ஸ் ஹன்னிங்டன். இறையியல் படிப்பை முடித்த இவர் ‘இயேசுவே மெய்யான தெய்வம்’ என்று அறிவிக்கும் சுவிசேஷ ஊழியத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு 1875 இல் அவரது சொந்த ஊரிலேயே ஆலய பொறுப்பாளராகவும் ஊழியம் செய்தார். 

கிழக்கு ஆபிரிக்காவில் தன்னார்வ தொண்டு செய்யும் படியாக இங்கிலாந்து நாட்டின் Church Missionary Soceity இல் சேர்ந்து மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். அப்போது அவருக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகியிருந்தது. ஜூன் 29, 1882 இல் சான்சீபர் தீவிற்கு 6 பேர் கொண்ட மிஷனரிகளுக்கு தலைவராக பயணத்தைத் தொடங்கினார் ஹனிங்டன். சான்சீபர் தீவு அடிமை வியாபார மையமாகவிருந்த காலமது. அதுமட்டுமல்லாது கொடுமையான பல நோய்களுக்கும் பிறப்பிடமாகவும் இருந்தது. பாலியல் நோய்கள், மலேரியா, தைபோயிட் போன்ற கொடுமையான நோய்களுக்கு மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கும் அநேக இன்னல்கள் இருந்தது. காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கின் நிமித்தம் முடக்கப்பட்ட ஜேம்ஸ் ஹன்னிங்டன் 1883 இல் தன் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

ஜுன் 24இ 1884 இல் உடல் சற்றுத் தேறியிருந்த அவர் Arch Bishop ஆக பதவி உயர்த்தப்பட்டு இம்முறை உகண்டா தேசத்திற்கு மிஷனரி பணித்தள பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். உகண்டா தேசத்தில் பல பாடசாலைகளை நிறுவினார். பல தொண்டு சேவைகளையும் ஆற்றினார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. பாகுபாடற்ற அவரின் அன்பு காட்டும் தன்மை கிறிஸ்துவின் அன்பை ஜனங்களுக்கு பிரதிபலித்தது. சுவிசேஷமும் மிக வேகமாக பரவியது. அனேக ஜனங்கள் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இயேசுவின் பாதத்தில் தங்களை அர்ப்பணித்தனர்.


மக்கள் மத்தியில் இவருக்கு ஏற்பட்டிருந்த செல்வாக்கையும், ஜனங்கள் இயேசுவின் பாதத்தில் சேர்க்கப்படுவதையும் தாங்கிக்கொள்ளாத 2ம் வாங்கே என்ற சிற்றரசன் ஹன்னிங்டனை கொலை செய்ய வகை தேடினான். கூடவே ‘உகண்டாவை ஆளப்போகிறவர் கிழக்கிலிருந்து தான் வரவேண்டும்’ என்ற நம்பிக்கை வேறு அங்கிருந்தது. இதன் காரணமாக ஜேம்ஸ் ஹன்னிங்டன் மீது ஏராளமான பொய்க் குற்றச்சாட்டுக்களை சாட்டி அவரையும் அவரோடு கூட இருந்த மற்றைய மிஷனரிகளையும் சிறையிலடைத்தான் அந்த சிற்றரசன்.

 அவன், சிறைப்படுத்த தெரிந்தெடுத்த இடம் தான் அந்த விஷப்பூச்சிகளும், எலிகளும் நிறைந்த அருவருப்பான குடிசை. ‘ஒரு வாரத்திற்குள் அவர்கள் மரித்துவிடுவர்; நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என நினைத்திருந்த அச் சிற்றரசனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அதனால் மிகவும் கோபமடைந்த அவன் 8 நாட்களாக சிறையிருப்பிலிருந்த ஜேம்ஸ் உடன் பணிபுரிந்த மிஷனரிகளை 29 ஒக்டோபர், 1885இல் கொலை செய்தான். ஜேம்ஸ் ஹன்னிங்டனையோ பொது மேடையில் நிறுத்தி இருபுறமும் ஈட்டியால் குத்திக் கொலை செய்யும் படி உத்தரவிடுகிறான். அவர் ஈட்டியால் குத்தப்பட்ட போது, ‘இயேசுவை உகண்டாவிற்கு கொண்டுவரும் படியான பாதையை என் இரத்தத்தை விலைக்கிரயமாகச் செலுத்தி வாங்கிவிட்டேன்’ என உங்கள் சிற்றரசனிடம் போய்ச் சொல்லுங்கள் என்று கூறி ஜீவனை விட்டார்.

தன்னுடைய 38வது வயதிலேயே இயேசுவுக்காய் இரத்தசாட்சியாய் மரித்தார். இந்த சம்பவம் கிறிஸ்தவ உலகை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மரணத்தைத் தொடர்ந்து அனேக மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து தங்களை உகண்டாவிற்கு மிஷனரி ஊழியம் செய்யும் படி அர்ப்பணித்தனர். அவ்வாறு சென்றவருள் அனேகர் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக அங்கேயே மரித்தனர். 

2014, ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உகண்டாவின் மொத்த மக்கள் தொகையில் 84.5 வீதமானோர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அன்று ஹன்னிங்டன் மரிக்கும் தறுவாயில் விசுவாசத்துடன் கூறிய ‘இயேசுவை கொண்டு செல்லும் படியான பாதையை என் இரத்தத்தைக் கொண்டு சம்பாதித்தேன்’ என்கிற வார்த்தை, எவ்வளவு உண்மையானதென பாருங்கள். ஜேம்ஸ் ஹன்னிங்டனைப் போலவே நாமும் பாவ இருளில் இருக்கும் ஜனத்தண்டைக்கு இயேசுவையும் தேவ ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தையும் கொண்டு செல்ல ஆயத்தப்படுவோம்! அதற்கு எம்மை அர்ப்பணிப்போம்!

‘ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?

அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.’ 

(ரோமர் 10:13-15)


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.


    

Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...