Skip to main content

அமெரிக்க மிஷனரி டேவிட் பிறேய்நாட் | American missionary - David Brainerd | (1718 -1747)



by டேவிட் அண்ணா

>>>

David Brainerd சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஜீவித்திருந்த போதிலும் இன்றும் மங்கா புகழ் பெற்று விளங்குகிறார். காரணம் அவருக்கிருந்த ஆத்தும தாகம் அத்தனை விலையேறப்பெற்றது. எம்மையும் இன்று ஒரு கணம் அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர் வசதியான வாழ்க்கையை விட்டு எளிமையான செவ்விந்திய மக்களிடையே சென்று தேவனுடைய ஊழியத்தைச் செய்தார். 1718, ஏப்ரல் மாதம் 20ம் திகதி அமெரிக்காவிலுள்ள ‘Haddam’ என்ற ஊரில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையாரை இழந்தார். பின்னர்; பதினான்காம் வயதில் தனது தாயாரை இழந்து அனாதையாக விடப்பட்டார். அதனால் சிறுவயது முதல் சோக மனப்பான்மை உடையவராகக் காணப்பட்டார்.

பாவத்தைக் குறித்த பயம் இல்லாவிட்டாலும் தன் சரீர பெலவீனத்தினிமித்தம் மரணத்தைக் குறித்த பயம் இவரிடம் காணப்பட்டது. கெட்ட வாலிபருடைய சகவாசத்தை விரும்பாவிட்டாலும் களியாட்டுக்கள் அவருக்கு அதிக பிரியமாயிருந்தது. எவ்வளவு ஆவலுடன் அங்கு செல்வாரோ, அதே ஆவலோடு திரும்பாமல் மனச்சாட்சியில் கறை படிந்தவராய் வேதனையோடு வீடு திரும்புவார். 1737ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ட்ரம்ப்’ எனுமிடத்திலுள்ள பண்ணையொன்றில் வேலை பார்த்தார். அங்கே முதியோர்களோடு பழக ஆரம்பித்ததன் விளைவாக வேதத்தை நன்கு வாசித்து, தியானிக்க ஆரம்பித்தார். மேலும் தன் சகோதரனுடன் சேர்ந்து ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, தான் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகியுள்ளதாக தன் மனதில் உணர்த்தப்பட்டு அதிக கவலைக்குள்ளானார். ஆனாலும் தேவனுக்காக மத சம்பந்தமான காரியங்களில் (வேதத்தை பிறருக்கு போதித்தல், ஆராதனையில் பங்கெடுத்தல், தான தருமம் புரிதல் போன்றவை) ஈடுபடுவதால் தேவன் பரிதாபம் கொண்டு தன்னை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணி தன் சுயநீதியில் தங்கிவாழ ஆரம்பித்தார். ஆனாலும் அவர் இருதயம் கவலையால் நிறைந்திருந்தது. திடீரென்று பூமி பிளந்து நரக கல்லறைக்கு போய் விடுவேனோ என்ற பயம் அவருக்கு அதிகமாயிற்று. அவர் செய்த அக்கிரமங்கள் மலை போல் அவர் கண் முன் வந்து நின்றன. எப்படி ஆண்டவரிடம் சேருவது என்று சிந்தித்தார். தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் என்று கண்டு கொண்டார்.

1739ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேவனிடம் தனியாக ஜெபிக்கச் சென்றார். தேவனை அவருடைய இருதய கண்கள் கண்டன. மாலை இருட்டும் வரை அந்நிலையிலே நின்றார். அனைத்தும் புதியதாயின. தேவனுடைய மகத்துவமும் ஆழமும் அவரை மெய் மறக்கும் படி செய்து விட்டன. பின்பு ‘தேவனுடன் ஒரு மணி நேரம் கழிப்பது, இவ்வுலக இன்பங்களுக்கு இணையாகாது’ என்று கண்டு கொண்டார். உபவாசிக்கவும், ஜெபிக்கவும் ஆண்டவர் தம்முடைய அறுவடைக்கு தன்னை அனுப்பும் படி வேண்டினார். புறஜாதி மக்களுக்காக வியாகுலத்தோடு ஆண்டவருடைய சமூகத்தில் நின்றார். 

ஜூன் மாதம், 1743ம் ஆண்டு தன்னுடைய சுவிசேஷ ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கும் பொருட்டு ஒருநாளை உபவாச ஜெபத்திற்காக ஒதுக்கி வைத்தார். என்றுமே கண்டிராத ஒரு அனுபவத்தை அந்நாளில் பெற்றார். இதே நிலையில் இருந்துவிடலாமே என்று ஏங்கினார். David Brainerd அமெரிக்காவின் பூர்வீககுடிகளான செவ்விந்தியர் (Stockbridge Delaware and Sasquehanna Tribes of Indians) வசிக்கும் பல இடங்களுக்கு சென்று ஊழியம் செய்துள்ளார். முதன் முதலில் செவ்விந்தியர் வாழ்ந்த ‘கௌனாமிக்’ (Kaunameekஎன்கிற இடத்திற்கு சென்று அங்கு வைக்கோல் போர் ஒன்றை தெரிந்து கொண்டு அதில் தங்கினார். அதிகாலையில் எழுந்து ஜெபித்து வேதத்தை தியானித்த பின்பே, செவ்விந்தியருக்கு இயேசுவை அறிவிப்பார். சிலர் அமைதலாக கேட்டனர். சிலர் சிரத்தை காண்பித்தனர். 

‘உங்கள் பிரசங்கத்தை கேட்ட மாத்திரத்தில் என் இருதயம் கதற ஆரம்பித்தது’ என்று ஓர் தாயார் அவரிடம் ஒருநாள் கூறினார்கள். டேவிட்டுக்கு ஒரே சந்தோஷம். எனினும் அங்கு அவருடைய ஊழியம் மகா கடினமாய் இருந்தது. சரீரம் பலவீனமடைந்தது. தினமும் ஒன்றரை மைல்கள் தூரம் நடந்து சென்றே ஊழியம் செய்ய வேண்டும். அவருடைய ஆகாரமோ கொஞ்சம் வறுத்த பயறும், நெருப்பில் சுடப்பட்ட ரொட்டியுமே. அனேக அசௌகரியங்கள் இருந்த போதிலும் கஷ்டத்தை சந்தோஷமாக தாங்கிக் கொள்ளும் கிறிஸ்துவின் நல் போர்ச்சேவகனாய் விளங்கினார். அனேகநேரம் தனித்தே இருந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கு அவருடைய மொழிபெயர்ப்பாளரை தவிர வேறு எவரும் இல்லை. ஒரு முறை பதினைந்து மைல்கள் நடந்து சென்றால் தான் ரொட்டி வாங்க முடியும் என்ற நிலையில் செவ்விந்தியரின் உணவை சாப்பிடக் கற்றுக்கொண்டார். சரீர பலவீனத்தின் நிமித்தம் சிறிது காலம் அவருடைய சொந்தவிடம் சென்று மீண்டும் செவ்விந்தியரிடமே திரும்பினார்.

உபத்திரவங்கள், சோர்வுகள், கஷ்டங்கள் இவைகளின் மத்தியில் இந்த நீர்க்குமிழி போன்ற வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணிக்குமாறு வேண்டினார். மரண அடக்க ஆராதனையொன்றில் அவர் கொடுத்த செய்தியால் அனேகர் தொடப்பட்டனர். குதிரை மீது சவாரி செல்லும் நேரங்களிலெல்லாம் செவ்விந்திய மக்களுக்காக ஜெபிப்பது வழக்கம். ஒருமுறை களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். ஒரு பிரயோஜனமும் இல்லை. உடனே சாத்தான், ‘இப்பேர்ப்பட்ட மூட நம்பிக்கையுடைய செவ்விந்தியர்களை உன்னால் இரட்சிக்கக் கூடுமோ?’ என்ற கேள்வியை அவரின் மனதில் எழுப்பினான். எனினும் தேவனின் ஒத்தாசையால் அதை மேற்கொண்டார். ஆண்டவருடைய சக்தி எல்லாவற்றிற்கும் மேலானது என்பதை உணர்ந்துகொண்டு தொடர்ந்து அங்கு பணியாற்றினார்.

ஒருமுறை செவ்விந்தியருக்கு பிரசங்கம் செய்யும் போது அவர்கள் ஆத்தும வியாகுலம் அதிகரித்ததால் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தனர். கிறிஸ்து தங்களை முற்றிலுமாக கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அன்று அனேகர் தொடப்பட்டனர். அக் கிராமத்திலிருந்த அனைவரும் வீடு தவறாமல் அழுது ஜெபித்தனர். இது இன்னும் ஊழியத்தில் அவரை உற்சாகமூட்டியது. எனினும் சிலர் அவரை ‘தேசதுரோகி’ என்று பொய்யாய் குற்றஞ்சாட்டி உபத்திரவப்படுத்தினர். அப்படியிருந்தும் அவைகளால் அவர் சோர்ந்து போகாது ‘தேவன் தன் உயர்ந்த அடைக்கலமானவர்’ என்று கூறி தன்னை திடப்படுத்திக் கொண்டார். இவ்வாறு டேவிட் பிரேயினாட் கிறிஸ்துவுக்காக சகல உபத்திரவங்களையும் பொறுமையாக சகித்து, தேவன் தனக்கு கொடுத்த வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துக் கொண்டவராய் 1747ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதியன்று இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். இவரது முன்மாதிரியான வாழ்வு பிற்கால மிஷனரிகளான வில்லியம் கேரி (William Carey), மற்றும் ஜிம் எலியட் (Jim Elliot), ஜேம்ஸ் பிரேயினாட் டெய்லர் (James Brainerd Taylor)  மற்றும் பல கிறிஸ்தவர்களுக்கு மிஷனரி ஊழியத்தின் மீது பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.

ஆம் எனதருமை நண்பர்களே, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாய் அலைந்த டேவிட் பிரேயினாட்டை உலகமறியச் செய்த தேவன் தம் திட்டத்தை நிறைவேற்ற இன்று உங்களையும் அழைக்கிறார். இன்றும் கூட பாவ அடிமைத்தனங்களிலும், சாபங்களிலும், நோய்களிலும், புறக்கணிப்பு, மன வேதனை, கஷ்டங்கள் போன்றவற்றின் மத்தியில் நம்பிக்கையிழந்து, சரியான வழிகாட்டுதலின்றி, தேவனற்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கிறிஸ்து தரும் விடுதலையை எடுத்து கூறி, நல்வழி காட்டி, விடிவெள்ளி நட்சத்திரமாம் இயேசுவண்டை வழிநடத்தவும், நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளில் இயேசு இராஜாவின் மகிமைக்காக ஏதாகிலும் சாதிக்கவும் முன்வருவோமாக!

‘ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.’ 

(எபிரேயர் 12:1)

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!







Comments

Popular posts from this blog

ஜோன் விக்ளிப் (John Wycliffe)

by  டேவிட் அண்ணா >>> ஜோன் விக்கிளிப் என்பவர் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘திருச்சபை சீர்திருத்தத்தின் விடிவெள்ளி’   ( The Morning Star of Reformation )  என்றும் ‘எழுதுகோல் புரட்சியாளர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அக்கால திருச்சபையில் அதிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்பட்ட போப்பினதும் உரோமன் கத்தோலிக்க திருச்சபையினதும் தவறான கொள்கைகளுக்கு எதிர்த்து நின்றவர். அத்துடன் கிறிஸ்துவுக்காகவும், சத்தியவசனத்திற்காகவும் மரிக்கவும் ஆயத்தமாயிருந்தவர். 14ம் நூற்றாண்டில் திருச்சபையில் ஓர் விழிப்புணர்வு வருவதற்கு  ‘Peter Waldo’  இற்கு பிறகு இவரும் ஓர் முக்கிய காரணமாக இருந்தார்.  ஜோன் விக்கிளிப் கி.பி. 1330ம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள யோர்க்சயர்  ( Yorkshire )   எனும் இடத்திலுள்ள ஹிப்ஸ்வெல்  ( Hipswell )  என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ரோஜர் விக்ளிப், தாயார் கத்தரின். ஜோன் விக்ளிப் தனது 17ம் வயதில்  Oxford University   இல் சட்டப்படிப்பைப் படிக்கச் சென்றார். அங்கு மிகவும் தலைசிறந்த மாணவனாக அவர் திகழ்ந்தார்.  Arch Bishop ...

ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார்

  by  டேவிட் அண்ணா >>> ஆபிரிக்காவின் வெள்ளை ராணி – மிஷனரி. மேரி ஸ்லேசர் அம்மையார் ; (1848 – 1915) மேரி ஸ்லேசர் 1848 ம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று ஸ்கொட்லாந்திலுள்ள ஏபர்டீன் எனும் ஊரில் பிறந்தார். இவர் கிறிஸ்துவை தன் வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாள் முதற்கொண்டு , கிறிஸ்துவுக்காக துணிச்சலோடும் துடிதுடிப்போதும் இறைபணியாற்றி வந்தார். ஆப்பிரிக்கா கண்டம் , டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரியை இழந்து தவித்த சமயம் அது. ஆபிரிக்காவிற்கு செல்லவோ ஆட்கள் இல்லை. அத்தருணத்தில் , அம் மிஷனரி ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணம் செய்தார் மேரி ஸ்லேசர்.   கலபார் நதி , இன்றைய நைஜீரியா. அதுவே மேரியின் தரிசன பூமியாயிருந்தது. ஆனால் அன்று அவ்வூர் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தது. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. வாழ்க்கைக்கானச் சட்டமோ , ஒழுக்கமான வாழ்க்கை முறையோ அங்கு இருக்கவில்லை. மாறாக மூடப்பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஓர் தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காய்வதற்கு முன்னே , கொடூரன் ஒருவனின் கை , மூர்க்கமாய் பாய்ந...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...