Skip to main content

நம்மைத் தெரிந்துகொண்ட இயேசு சுவாமி | GEM STONES


by பிறேமன் அண்ணா

>>>



2011ம்  ஆண்டு, நான் இந்தியாவின் பெங்களூரிலே பல்கலைக்கழக மாணவனாய் இருந்த காலம். ஒரு நாள், அழகான குளிர்ச்சியான அதிகாலை நேரம் அது. எனது சில நண்பர்களோடு சேர்ந்து பெங்களூரு நகரத்துக்கு அப்பாலே இருக்கும் "நந்தி மலை" என அழைக்கப்படும் மலையின் உச்சியை அடைவதற்காக சில மோட்டார் சைக்கிள்களில் சேர்ந்து புறப்பட்டோம். 


எமது நோக்கமெல்லாம், சூரியன் உதிப்பதற்கு முன்னரே நாம் அந்த மலை உச்சியை அடைந்துவிடவேண்டும் என்பதே. திரண்டிருக்கும் அதிகாலை மேகக்கூட்டங்களுக்கு மேல் உள்ள அந்த மலையுச்சியிலிருந்து சூரியன் உதிப்பதைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியென்று கேள்விப்பட்டிருந்தோம். ஆகையால் எங்கள் மோட்டார் சைக்கிள்கள் விரைந்தே சென்றுகொண்டிருந்தன. 

இப்படியாக நாங்கள் விரைந்து சென்ற வழியிலே, நகரத்தின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். எமது மோட்டார் சைக்கிள்கள் சென்ற அந்த பாதைகள்  என் கவனத்தை ஈர்த்தது. திடீரென்று எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நாங்கள் பெங்களூரு நகரத்தை விட்டு வெளியேறும் வரையும் அந்த அதிகாலைக் குளிர்ச்சியிலே அநேக வணக்க ஸ்தலங்களை நான் அவதானித்தேன். நாங்கள் சென்ற வழிநீளம் வெவ்வேறு நம்பிக்கைகளை உடையவர்கள் வழிபடும் பல்வேறு ஆலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள், கூடாரங்கள், ஆச்சிரமங்கள் இருப்பதை அவதானித்தேன். 

இவற்றையெல்லாம் அவதானித்து அவற்றின் பலவிதமான கட்டட அமைப்பு அழகையெல்லாம் ரசித்து சென்ற எனக்கு திடீரென்று ஒரு கேள்வி மனதில் எழுந்தது. சிறு வயதிலிருந்து ஒருபோதும் எழாத கேள்வியொன்று அன்று என் மனதிலே உதித்தது. நகரத்தின் கடைசி வீதிசமிஞ்சை மின்விளக்கு  சந்தியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த எமது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே நமது ஆண்டவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். விபரீதமான ஒரு கேள்வி. என் வாழ்வில் நான் ஒருபோதும் ஆண்டவரைப் பார்த்து கேட்காத ஒரு கேள்வி. 

"என் ஆண்டவரே, இத்தனை விதமான வெவ்வேறு நம்பிக்கைகளின் மத்தியில் நான் ஏன் உம்மைத் தெரிந்துகொண்டேன்? உம்மை நான் எனது நம்பிக்கையாய் தெரிந்துகொண்ட அந்த ஒரே காரணம் என்ன?" 24 ஆவது வயதில் எழுந்த இந்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் தேடிய என் உள்ளம் ஒரு கணம் ஏங்கிப்போனது. ஆனாலும் இதைப்பற்றி பின்பு யோசிப்போம் என்று மனதிலே  சொல்லிவிட்டு தொடர்ந்தும் பயணத்தை சந்தோஷமாய் முடிப்போம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் எனது கவனத்தை பயணத்திலே செலுத்தினேன்.

 இந்த மன குழப்பத்தின் நேரம் எமது மோட்டார் சைக்கிள்கள் எல்லாம்  மெதுவாக அந்த பாதையின் முடிவிலே இருக்கும் அந்த வீதிசமிஞ்சை விளக்குகள் அருகாமையில் வந்து நின்றன. எம்  முன்னே ஒரு ஜீப் வண்டியும் நின்றுகொண்டிருந்தது. சிவப்பு நிற விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. பச்சைநிற விளக்காக மாறுவதற்கு இன்னும்  60.. 59.. 58.. 57.. 56.. செக்கன்கள் எனக் காட்டிக்கொண்டு இருந்தது. சரியாக 03.. 02.. 01.. 00.. என கடிகாரம் மாறி பச்சை நிற விளக்கு ஒளிரவே மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் உறுமிக்கொண்டு புறப்படும் நேரம் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நாம் கேட்டவற்றை மறந்தாலும் அவற்றை மறக்காமல் பதில் தரும் ஆண்டவர் எனக்கு ஒரு ஆச்சரியத்தை வைத்திருந்தார். 

எமக்கு முன்னே அவ்வளவு நேரமும் நின்றுகொண்டிருந்த ஜீப் வண்டியின் பின் பக்க கண்ணாடியில் ஒரு வேத வசனம் எழுதப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தேன். என்ன ஒரு பெரிதான ஆச்சரியம் தெரியுமா? அந்த வேத வசனம் என்ன சொன்னது தெரியுமா? 

யோவான் 15: 16
"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்."

இன்றைய நாளிலும் இந்த ஆச்சரியத்தை வாசித்துக்கொண்டு இருக்கும் தம்பியே தங்கையே, உன்னையும் ஆண்டவர் தெரிந்துகொண்டிருக்கிறார். நாம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை. அவரே நம்மைப் பெயர்சொல்லி அழைத்த ஆண்டவர். வேதத்திலே உள்ள ஆண்டவருடைய வார்த்தை சொல்லுகிறது (எரேமியா 01:05) "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்" என்று. அன்றைய நாள் காலையிலே எனக்கு இவ்வளவு ஆச்சரியமான பதிலைக் கொடுத்த ஆண்டவர், நம் இயேசு, அவர் உண்மையுள்ள ஜீவனுள்ள ஆண்டவர். அவர் உங்களையும் தனக்காக தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். இன்றைக்கு நாம் நமது இயேசு சுவாமியை ஆராதிப்பது, அவருக்கு சாட்சியாய் வாழ்வது, அவருக்காய்  சேவை செய்வது என்பது நாம் விரும்பியதால் நடப்பதல்ல! அவர் நம்மைத் தெரிந்தெடுத்திருப்பதால் நம்மை அவருக்காய் நமது சமூகத்திலே சாட்சியாய் வாழ அழைக்கிறார். அவருடைய உண்மையான சீஷராய் இந்த உலகிலே வாழ அவர் நம்மை அழைத்திருக்கிறார். 

இன்றைக்கு உங்களை சுற்றிலும் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்கள், வீட்டில் இருப்பவர்கள், அயலவர்கள் உங்களை, உங்கள் விருப்பங்களை, நல்ல குணங்களை, கெட்டித்தனங்களை அறியாமல் இருக்கலாம். ஆனால் உங்களைத் தெரிந்தெடுத்து அழைத்திருக்கும் நம் இயேசு சுவாமி அதையெல்லாம் நிறம்பவே அறிந்திருக்கிறார். அவருக்கு உங்கள் வாழ்வை ஒப்படைத்து, அவருக்காக வாழும்போது, அவர் நிச்சயமாய் உங்களை  உயர்த்திடுவார். 

ஜெபம் செய்வோமா?
"அன்பின் பிதாவே, நீர் எங்களை உமக்காய் தெரிந்தெடுத்திருக்கிறபடியால் உமக்கு நன்றி. இயேசு சுவாமியின் மூலமாய் நீர் எமக்கு காட்டின அன்புக்காய் நன்றி. உமது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தோடு நாங்கள் உமக்காய் வாழ நீர் எங்களுக்கு உதவி செய்தருளும். 
ஆமென். 





வாசிப்பாளர் சின்னம் 
READERS BADGE 





Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...