Skip to main content

இயேசு சுவாமியைப் பற்றிய நமது ஆவல் | BIBLE STUDY

 

by பிறேமன் அண்ணா

>>>


இயேசு சுவாமியின் சீஷராய் வாழ விரும்பும் நமக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்று அவரைப்பற்றிய ஆவலாகும். இயேசு சுவாமியைப் பற்றி அறிவதிலும், அவர் நம்மை சீஷராய் அழைத்திருக்கும் நோக்கத்தையும் அறிவதிலும் உள்ள ஆவல். இயேசு சுவாமியின் பிறப்பும், வாழ்வும், சிலுவை மரணமும், அவருடைய உயிர்த்தெழுதலும் இந்த உலகுக்கு தரும் நல்ல செய்தி பற்றி அறியும் ஆவல். அவர் நமக்கு இந்த உலகத்தில் விட்டுச் சென்ற ஊழியத்தின் முக்கியத்துவத்தை அறியும் ஆவல். இவையே நம் ஆண்டவர் இயேசுவின் மேலே நமக்கு இருக்கும் ஆவலாய் இருக்கவேண்டும்.

அடர்ந்த காடு ஒன்றினுள் இருந்து மிகையாக வளர்ந்து இருக்கும் மரங்கள் எப்படி சூரிய ஒளியைத் தேடி நாடி வளர்கிறதோ, அது போலவே, இயேசு சுவாமியைப் பற்றிய ஆவலுடன் நாம் வளரவேண்டும். அனுதினமும் வேதத்தை வாசிப்பதன் மூலம், இயேசு சுவாமியின் வாழ்வையும் அவருடைய போதனைகள் ஒவ்வொன்றையும், அவருடைய வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் எப்படியாய் இந்த உலகையும் அவரைச் சுற்றி இருந்தோரின் வாழ்வையும் மாற்றின என்றும் நாம் ஆவலுடன் அறிந்துகொள்ளவேண்டும். இந்த ஆவலின் பலனாக, நமக்கு ஆண்டவர் தந்திருக்கும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய தேவையான ஆண்டவரின் வழிநடத்துதல் நமக்குக் கிடைக்கும். 

இயேசு சுவாமியின் வாழ்க்கையை விவரமாக எடுத்துச் சொல்லும் சுவிசேஷ புத்தகங்களில் ஒன்றான லூக்கா சுவிசேஷத்திலே மார்த்தாள் மரியாளின் வீட்டிலே இயேசு தங்கியிருந்தபோது நடந்ததொரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.  

இயேசு சுவாமி ஓரிடத்தலிருந்து இன்னுமொரு ஊரிற்கு பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் (லூக்கா 10: 38-42).

இந்த சம்பவத்திலிருந்து ஒரு ஆழமான சீஷத்துவப் பண்பினை நாம் அறியக்கூடியதாக உள்ளது. மார்த்தாளும் மரியாளும் ஒரே வீட்டிலே வளர்ந்த, வாழ்ந்துகொண்டிருந்த சகோதரிகளாய் இருந்தாலும், மரியாளுக்கு இயேசு சுவாமியைப் பற்றிய ஆவல் அதிகமாய் இருந்தது. மார்த்தாள் பற்பல வீட்டு வேலைகளைக் கவனித்து செய்து வந்தாலும், மரியாள் இயேசுவைப்பற்றியும் அவர் போதனைகளைப் பற்றியுமே ஆவலாய் இருந்தாள். மரியாள் எந்த அளவுக்கு இயேசு சுவாமியைப் பேசக்கேட்பதிலே ஆவலாய் இருந்தாள் என்றால், மார்த்தாள் இயேசு சுவாமியிடம் வந்து முறைப்பாடு செய்யும் அளவுக்கு ஆவலாய் இருந்தாள். இயேசு சுவாமியின் பாதத்தண்டையிலே அமர்ந்திருந்து அவர் பேசுவதைக் கேட்பதிலேயே அவளுடைய முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தது. 

மரியாளின் ஆவல் வீணாய்ப்போகவில்லை. இயேசு சுவாமி மரியாளிடம் இருந்த அந்த ஆவலை "தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்" என்று சொல்கிறார். இயேசு சுவாமி தங்களது வீட்டிலே தங்கியிருக்கிறார் என்பது மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் பிரமிப்பை நிச்சயம் உண்டாக்கியிருக்கும். நன்றாக உபசரிக்கவேண்டும், நேரத்துக்கு உணவு சமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருவருடைய மனதிலும் இருந்திருக்கும். ஆனாலும், இவைகளைத் தாண்டியும், இயேசு சுவாமியின் எண்ணங்களை, அவருடைய அழைப்பை , அவருடைய போதனைகளை  மென்மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலுடன் மரியாள் அவருடைய பாதத்தண்டையிலேயே அமர்ந்திருந்தாள். மார்த்தாளோ மற்றைய வீட்டுக் காரியங்களைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். 

இதை வாசிக்கும்போது நமக்கும் பெரிதானதொரு கேள்வி மனதிலே எழக்கூடும். "அப்படியானால், வீட்டுக்காரியங்களை மற்றும் நாம் அன்றாடம் செய்யவேண்டியவற்றைக் கவனிக்கத் தேவையில்லையா?" என்ற எண்ணம் தோன்றக்கூடும். ஆனாலும் நாம் இங்கு கவனிக்கும் சந்தர்ப்பம் இந்தக் கேள்விக்கு மிகவும் ஆழமானதொரு பதிலைக் கொடுக்கிறது. வீட்டிலே அநேக வேலைகள் செய்யவேண்டியிருந்தும் மரியாள் அன்றைய நாளுக்கு அன்றைய சந்தர்ப்பத்துக்கு இயேசு சுவாமியின் பிரசன்னத்தைத் தெரிந்தெடுத்தாள். அவரைக்குறித்து மரியாளுக்கு இருந்த ஆவல், அன்றைய நாளின் வேலைகள் தேவைகள் அனைத்தையும்விட இயேசு சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் புரிந்துகொள்வதே அவளுக்கு முக்கியமானதாய்ப் தென்பட்டது. அன்றைய நாளின் உணவு, வீட்டுத் தேவைகள், தனது தனிப்பட்ட காரியங்கள் அனைத்தையும் விட மரியாள் "தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்." நிரந்தரமில்லாத இந்த தேவைகளின் மத்தியில் நிரந்தரமான, தன்னை விட்டு ஒருபோதும் எடுபடாத ஆண்டவரின் வார்த்தைகளே அவளுக்கு ஆவலை ஏற்படுத்தியது. 

இன்றைய நாளிலும், நாம் இயேசு சுவாமியின் உண்மையுள்ள சீஷராய் வாழ்வதற்கு அவரைப்பற்றிய ஆவலும், அந்த ஆவலின்மூலம் நாம் செய்யும் தெரிவுகளும் மிகவும் முக்கியமானவை. நம்மைச் சுற்றி அனுதினமும் அநேக தேவைகள், நாம் செய்துமுடிக்கவேண்டிய கடைமைகள், படித்து சித்தியடையவேண்டிய பரீட்சைகள் என்று அநேகம் இருக்கலாம். ஆனாலும், இயேசு சுவாமியைப் பற்றிய ஆவலும், அவரில் நாம் வளரவேண்டும் என்ற என்ற எண்ணமும் ஒருபோதும் குறைந்துவிடக்கூடாது. எம்மைச் சுற்றி இருக்கும் எந்தவொரு பொருளோ, வேலையோ, நிலைமையோ, உறவோ இயேசு சுவாமியோடு நாம் செலவிடும் நேரத்தையும் அவரைப்பற்றி எமக்கு இருக்கும் ஆவலையோ குறைக்க இடமளிக்கக் கூடாது. அதுவே நம் ஆண்டவர் இயேசு சுவாமி நம்மிடம் எதிர்பார்க்கும் 'நம்மை விட்டெடுபடாத நல்ல பங்கு.'

ஆகையால், கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான தங்கை தம்பிமாரே, நமது வாழ்வின் அன்றாட ஓட்டங்கள், தெரிவுகள், வேலைகள், முயட்சிகளின் மத்தியில் இயேசு சுவாமியைப் பற்றிய நமது ஆவலும், அவருடைய விருப்பங்களை எண்ணங்களை புரிதலும், அவரோடு செலவிடும் நேரமும் நமது முதன்மையான தேவைகளாய் இருக்கும்போது, நாம் அவருடைய சீஷராய் வாழ்வது நமக்கு ஏற்றதாய் இருக்கும். 





Comments

Popular posts from this blog

கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்போம் | SHORT STORY

by ரஜீவனி அக்கா >>> ஒரு சூப்பர் மார்க்கட் ஒன்றிலே, தன் சிறுபிள்ளையுடன் ஒரு தாயார் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.  அந்த குட்டிப்பிள்ளை கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு ட்ரோன் ஹெலிகொப்டரை தூக்கி வைத்துக்கொண்டு “எனக்கு இது வேண்டும்” என்று அழுதது.  தாய் ஏதோ ஒரு நன்மை கருதி, இதை நீ விளையாடும் அளவுக்கு உன் வயது பக்குவம் பெறவில்லை. இது உனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வேறு பொருட்களை எடுத்த வண்ணம் நகர்ந்தாள்.  தாய் வாங்கித் தராததைக் கண்டு குழந்தை காலை உதைத்து உதைத்து அழுதது.  தாயும் அவள் பங்கிற்கு எவ்வளவோ சொல்லி, கவனத்தைத் திருப்ப முயன்றும் முடியவில்லை.  வழியெல்லாம் அழுது அடம்பிடித்துக் கொண்டே சென்றது. ஒரு வழியாக குழந்தையை சமாளிக்க இயலாமல் அதை வேண்டி கொடுத்தார். வீடு திரும்பியதும் குழந்தைக்கு அதை சரியாக இயக்க தெரியாததால் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஹெலிகொப்டர் கீழே விழுந்து உடைந்து போனது..... நாமும் கூட ஏதாவது ஒரு காரியத்தை விரும்பி ஆண்டவரிடம் கேட்கலாம்.  அது எப்படியாவது கிடைக்க வேண்டுமென்று ஆசையாய் எதிர்பார்க்கலாம்.  ஆனால் நம்மைக் குறித்து ...

மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் ( Medical missionary - Dr. John Scudder Sr.)

by  டேவிட் அண்ணா >>> மருத்துவ மிஷனரி - ஜோன் ஸ்கடர் (Dr. John Scudder Sr.) - கி.பி.1793 - 1855 மருத்துவர் ஐடா ஸ்கடரை (Dr. Ida Scudder) பற்றி கேள்விப்படாதோர் யாருமே இருக்கமாட்டோம். ஆனால் முன்னோடி மருத்துவ மிஷனரியான அவரது தாத்தா ஜோன் ஸ்கடர் சீனியர் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாத்தா ஜோன் ஸ்கடரில் ஆரம்பித்து பேத்தி ஐடா ஸ்கடர் வரை இரண்டு தலைமுறைகளாக ஸ்கடர் குடும்பத்தினர் இலங்கையர், இந்தியருக்கு மருத்துவ மற்றும் ஆன்மீக சேவை செய்திருக்கிறார்கள். என்னவொரு அர்ப்பணிப்பு பாருங்கள். இன்று ஜோன் ஸ்கடர் பற்றி ஒருசில காரியங்களை தெரிந்து கொள்ளலாம். அவர் 1793ம் ஆண்டு செப்டெம்பர் 3ம் திகதி அமெரிக்காவின் நியூ ஜேர்சி மாகாணத்தில் ப்ரிஹோல்ட் எனும் ஊரில் (Freehold, New Jersey, USA) பிறந்தார். சிறுவயதிலிருந்தே தேவையுள்ளோருக்கு உதவும் இரக்க குணம் நிறைந்தவராகக் காணப்பட்டார். எப்போதுமே ஜோனிற்கு கிறிஸ்தவ மனநிலை உண்டு என அவரது குழந்தைப் பருவம் பற்றி அவரது அம்மா கூறியிருக்கிறார். படிப்பில் கெட்டிக்காரனாகவிருந்த அவர் Princeton University மற்றும் New York College of Physicians and Surgeons இ...

கிறிஸ்தவ வழிபாட்டில் விக்கிரக ஆராதனை சூட்சுமமாய் உள்நுழைந்த வரலாறு

by  டேவிட் அண்ணா >>> கி.பி.7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகா கிரெகரி சபைகளில் படங்களும், விக்கிரகங்களும் இருக்க அனுமதி தந்திருந்தார். ஆனால், அவற்றை வழிபடவோ, வழிபாட்டுக்குத் துணையாகவோ பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் இருந்தது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இது மாறி படங்களுக்கு முன் நின்று ஜெபிப்பதும், முத்தமிடுவதும், படங்களைச்சுற்றி நின்று வழிபாடு செய்வதும் ஆரம்பித்ததால் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை ‘விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள்.  படங்களும், விக்கிரகங்களும் அழகாக இருக்கும் என்றும், சமய போதனைகள் நடத்துவதற்கு துணையாக இருக்கும், விக்கிரகங்ளென்பது புறஜாதியார் வழிபடும் சிற்பங்களைத் தான் குறிக்கிறது மாறாக நம்முடைய கடவுளை வழிபட நாம் உண்டாக்கிய சிற்பங்களை அவை குறிக்காது என்றெல்லாம் தவறாகவும் வேதாகம சத்தியத்திற்கு முரணாகவும் காரணங்காட்டி படங்களையும், விக்கிரகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்த அனுமதித்தவர்களுடைய செயல்களை முஸ்லீம்கள் கூடப் பார்த்து சிரிக்கும் நிலை உருவாகியது துக்ககரமானதே. கி.பி. 726 ஆம் ஆண்டில் கிழக்குப் பிராந்தியத்தின் பேரரசாக இருந்த 3ம் லிய...